மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், ரஷ்ய அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், நேற்று மாஸ்கோ சென்றடைந்தார்.
வரும் மே 9ஆம் தேதி, அங்கு நடைபெறவுள்ள ‘விக்டரி டே' கொண்டாட்டங்களில் கௌரவ விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
மாமன்னரின் தனியார் விமானம் ரஷிய நேரப்படி நேற்று மாலை 4.20 மணிக்கு நுவோகோ-2 சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அங்கு ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரே ருடெங்கோ, ரஷ்ய நெறிமுறைத் துறை தலைமை இயக்குநர் போக்தஷேவ் இகோர் விக்டோரோவிச் மற்றும் ரஷ்யாவுக்கான மலேசிய தூதர் சியோங் லூன் லாய் ஆகியோர் மாமன்னரை வரவேற்றனர்.
மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் விடுத்த இந்த அழைப்பானது, மலேசியாவுக்கு ரஷ்யா அளிக்கும் உயர்ந்த மரியாதையையும், இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுப்பெற்று வருவதையும் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பயணம், மலேசியா–ரஷ்யா இடையிலான தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மாமன்னர் மேற்கொண்ட ரஷ்ய அரசுமுறை பயணமானது, கடந்த 1967ஆம் ஆண்டு இருநாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகள் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவுக்கு சென்ற முதல் மலேசிய தலைவர் என்ற வரலாற்றுப் பயணமாக அமைந்தது.
இந்நிலையில், வரும் மே 9ஆம் தேதி அனுசரிக்கப்படும் ‘விக்டரி டே’ ஆனது, இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா பெற்ற வெற்றியை நினைவுகூரும் முக்கிய நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாண்டு நடைபெறும் விழாக்களில் சுல்தான் இப்ராஹிமின் பங்கேற்பு முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








