பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.28-
சிலாங்கூர் மாநிலம், புக்கிட் பெருந்தோங்கில் நேற்று பல்பொருள் அங்காடி ஒன்றின் முன் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த போது, பல்பொருள் அங்காடியின் முன் அமர்ந்து செல்போனில் உரையாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த நகையைக் கொள்ளையடிக்கும் முயற்சியானது நடந்துள்ளது.
கறுப்பு நிற அங்கியும், தலைக்கவசமும் அணிந்திருந்த நபர் சட்டென அப்பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை பறித்த போது அது கீழே விழுந்துள்ளது.
இந்நிலையில், அந்நபர் அங்கிருந்து மற்றொரு சந்தேக நபருடன் மோட்டாரில் தப்பிச் சென்றதாகவும் இப்ராஹிம் ஹுசேன் குறிப்பிட்டுள்ளார்.








