உலக வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடி வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் 1எம்டிபி ஊழல் விவகாரத்தின் முக்கிய மூளையாக குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடிய மலேசிய நிதியாளர் ஜோ லோ, அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப்பிடம் பொதுமன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின்னரும் கைது செய்யப்படாமல் இருந்து வரும் ஜோ லோ, இவ்வாண்டில் அமெரிக்க நீதித்துறையிடம் பொதுமன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறையான டிஓஜே-இன் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய அரசாங்க முதலீட்டு நிதியான 1எம்டிபியிலிருந்து குறைந்தது 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் மோசடி செய்யப்பட்டதன் பின்னால் செயல்பட்ட முக்கிய நபர் ஜோ லோ என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்க். நிறுவனத்தின் முன்னாள் வங்கியாளர்கள் இருவரின் உதவியுடன், ஜோ லோ, முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் சில வெளிநாட்டு அதிகாரிகளுக்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சமாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட நஜிப் ரசாக்குடன் சேர்த்து, இந்த மோசடி திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மேலும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகவும்,ஜோ லோ தனிப்பட்ட முறையில் குறைந்தது 1.42 பில்லியன் அமெரிக்க டாலரை கைப்பற்றியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அமெரிக்க நீதித்துறையின் இணையதள தகவலின்படி, “லோ தேக் ஜோ” என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் “தண்டனை நிறைவுக்குப் பிறகு பொதுமன்னிப்பு” கோரப்பட்டுள்ளது.
தற்போது அந்த மனுவானது, “நிலுவையில்” இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.








