கோலாலம்பூர், நவம்பர்.11-
பத்து ஆண்டுகளுக்கு மேலாக தனது பெண் குழந்தை தன்னிடமிருந்து பிரிக்கப்பட்டு இருப்பதை ஆட்சேபித்து, ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான எம். இந்திராகாந்தி, வரும் நவம்பர் 22 ஆம் தேதி, கோலாலம்பூர், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு ஊர்வலமாகச் சென்று மேல்முறையீட்டு மகஜர் ஒன்றை வழங்கவிருக்கிறார்.
தம்முடைய இந்த ஊர்வலமானது, போலீஸ் துறையிடம் தாம் சமர்ப்பிக்கும் கடைசி மேல்முறையீட்டு மனுவாகும் என்ற இந்திரகாந்தி தெரிவித்தார்.
தனது மகள் பிரசன்னா டிக்சா, நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப தன்னிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட இந்திகாந்தி, தாம் மேற்கொள்ளும் இந்த ஊர்வலமானது எந்தவொரு சமயத்தையோ, இனத்தையோ அல்லது பரிபாலனத்தையோ எதிர்க்கும் நோக்கத்தைக் கொண்டது அல்ல.
மாறாக, தனது முன்னாள் கணவரான கே. பத்பநாபன் என்ற முகமட் ரிதுவானிடமிருந்து தனது மகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று இந்திரகாந்தி தெரிவித்தார்.
அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு கோலாலம்பூர், சோகோ பேரங்காடி மையத்திலிருந்து புக்கிட் அமானை நோக்கி நீதிக் கோரி, தாம் ஊர்வலமாகச் செல்லவிருப்பதாக இந்திராகாந்தி இன்று அறிவித்துள்ளார்.
மேல்முறையீட்டு மனுவுடன் தனது மகள் பிரசன்னா டிக்சாவிற்கு மிக விருப்பமான கரடி பொம்மையைப் போலீஸ் படைத் தலைவரிடம் ஒப்படைக்கப் போவதாக இந்திராகாந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நீதிக் கேட்டு போராடும் இந்திராகாந்தியின் இந்த ஊர்வலத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸையிட் இப்ராஹிம் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.








