புத்ராஜெயா,ஆகஸ்ட்26-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகள் சிலரை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு, மியன்மார் நாட்டுப்பிரஜைகளை விமான நிலையத்தின் சிறப்பு முகப்பிடத்தில் சோதனை செய்யாமலேயே அனுமதிக்கும் மோசடிக் கும்பலில் ஆகக்கடைசியாக மியன்மார் நாட்டைச் சேர்ந்த மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 வயது மதிக்கத் தக்க அந்த மாது, விசாரணைக்காக புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்திற்கு நேற்று நள்ளிரவு வரவழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த மியன்மார் மாதுவை வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய ஊழல் தொடர்பில் கடந்த வாரம் புதன்கிழமை SPRM தொடங்கிய Op Pump சோதனை நடவடிக்கையில் இதுவரையில் நான்கு அதிகாரிகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.








