திரங்காணு மாநிலம், டுங்குன் பகுதியில் உள்ள பாகா ஓய்வு நிறுத்தம் அருகே நேற்று நடந்த கார் விபத்தில், 57 வயதான பெண் ஒருவர் தனது இடது காலை இழந்தார்.
கோல திரங்காணுவிலிருந்து குவாந்தான் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி விபத்திற்குள்ளானதாக பாகா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி நோர் ஹசாமுல்லா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் 57 வயதுடைய பெண்ணின் இடது கால் முழங்காலுக்குக் கீழே துண்டானதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், காயமடைந்த பெண்ணையும், துண்டான காலையும் மீட்டு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








