கோலாலம்பூர், ஜூலை.14-
உயர்மட்ட நீதிபதிகள் நியமனங்கள் தொடர்பிலான நீதித்துறை ஆணையத்தின் கூட்டக் குறிப்புகள் கசிந்து விட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஓசா எனப்படும் ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
நீதித்துறையின் முக்கிய ஆவணமாக, ரகசியமாக இருக்க வேண்டிய அந்த பிரதானப் பத்திரத்தின் உள்ளடக்க ஆவணம் எவ்வாறு கசிந்தது என்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு, தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
ஜேஏசி எனப்படும் நீதித்துறை நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கூட்டக் குறிப்புகள் கசிந்ததாக போலீஸ் துறை புகார் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விசாரணையைப் போலீசார், நேரடியாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது என்பதுடன் இது உயர் மட்ட அளவிலான விசாரணையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று டத்தோ ஶ்ரீ காலிட் தெரிவித்தார்.
இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து சாட்சிகளும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அவர் விளக்கினார்.
ஓசாவின் கீழ் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள், ரகசியத்தை வெளியிடுவது என்பது பெரும் குற்றமாகும். அந்த ரகசியக் காப்புச் சட்டத்தின் 8 ஆவது பிரிவின் கீழ் விசாரணை முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








