நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் வசிக்கும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேலும் 45 பசுமை மற்றும் திறந்தவெளி இடங்கள் அரசாணையில் சேர்க்கப்பட்டு நிரந்தரமாகப் பாதுகாக்கப்படுவதாகக் கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ இன்று அறிவித்துள்ளார்.
புதிதாகப் பாதுகாக்கப்பட்டுள்ள 45 இடங்களின் மொத்தப் பரப்பளவு 2,77,663 சதுர மீட்டர் ஆகும். இது சுமார் 39 கால்பந்து மைதானங்களுக்கு இணையானது. பெருகி வரும் நகரமயமாக்கலுக்கு மத்தியில், மக்களுக்கான பசுமை உரிமையைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஹன்னா இயோ விளக்கினார்.
இந்த இடங்கள் இனி எந்தக் காரணத்திற்காகவும் தன்னிச்சையாக வணிக ரீதியான அல்லது இதர பயன்பாட்டிற்கு மாற்றப்பட முடியாது. இவை எதிர்கால சந்ததியினருக்கான பொது இடங்களாகவே நீடிக்கும் என்று கோலாலம்பூர், தாமான் டேசா, டேசா ரியாவிற்கு வருகை புரிந்துப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஹன்னா இயோ இதனை தெரிவித்தார்.
கோலாலம்பூரை வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், நகரின் வெப்பத்தைக் குறைத்து வசதியான வாழ்விடமாக மாற்றவும் இந்த 'ஸ்பாஞ்ச் சிட்டி' கொள்கை உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.










