கோலாலம்பூர், பிப்ரவரி.04-
கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாருவில் வீடுகளைக் காலி செய்யும் நடவடிக்கையின் போது, அப்போதைய டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைவர் சுலிஸ்மி அஃப்பெண்டி சுலைமான் மீது கற்களை வீசிக் காயப்படுத்திய 16 வயது பையனுக்கு 100 மணி நேரச் சமூக சேவை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் நூர்ஃபாராஹயின் ரோஸ்லான் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் அந்தப் பையன் அடுத்த 6 மாத காலத்திற்குள், சமூக நலத்துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த 100 மணி நேரச் சமூக சேவையைச் செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி காலையில், ஜாலான் டத்தோ அப்துல் மாலிக் பகுதியில் மின்சாரத் துண்டிப்பு மற்றும் வீடுகளைக் காலி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி சுலிஸ்மி அஃப்பெண்டியைத் தாக்கி காயப்படுத்தியதாக பையன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி வீடுகளை இடிக்கும் பணி நடந்த போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், அடையாளம் தெரியாத நபர் வீசிய பொருள் பட்டு போலீஸ் அதிகாரியின் தலையில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்தச் சிறுவன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.








