கோலாலம்பூர், பிப்ரவரி.26-
புனித குர்ஆன் மீது கால் வைத்து அவமதித்ததாகக் கூறப்படும் 21 வயது பல்கலைக்கழக மாணவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தியுள்ளார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், எந்தவொரு மலேசியரும் மற்றொருவரின் சமயத்தைக் கேலி செய்வதோ, அவமதிப்பதோ முற்றிலும் தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இச்சம்பவத்தைப் பொறுத்த வரையில், புனித குர்ஆன் நூலை காலால் மிதித்து அவமதித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, சட்டப்படி சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ராயர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவத்திற்குப் பிறகு, தனது மகனை போலீசாரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படும் அம்மாணவரின் தந்தையின் செயலையும் ராயர் பாராட்டியுள்ளார்.
சட்டம் இனி அதன் கடமையைச் செய்யட்டும், நாம் ஒரு போதும் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது என்றும் ராயர் தெரிவித்துள்ளார்.








