பாதிரியார் ரேமண்ட் கோ காணாமல் போனது குறித்த ரகசிய விசாரணை அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, அரசாங்கம் செய்துள்ள மேல்முறையீட்டை சவாலுக்கு உட்படுத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அவரது குடும்பம் அனுமதி கோரியுள்ளது. குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் பேசிய உரையின் ஹன்சார்ட்- ஐ புதிய ஆதாரமாக முன்வைக்க அவர்கள் விரும்புகின்றனர்.
அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சைபுடின், சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் காணாமல் போனது தொடர்பான ரகசிய அறிக்கையை அவரது மனைவியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை, 2024-ஆம் ஆண்டிலேயே அரசு மீண்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
அம்ரி சே மாட் விவகாரத்தில் அரசு காட்டிய அதே அணுகுமுறையை பாதிரியார் கோ விவகாரத்திலும் கடைபிடிக்க வேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது. பாதிரியார் கோ மற்றும் அம்ரி சே மாட் ஆகிய இருவரின் மறைவு குறித்தும் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவின் அறிக்கையை பெறுவதற்கு இது முக்கிய ஆதாரமாக அமையும் என அவர்கள் கருதுகின்றனர்.









