நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் அடை மழையினால் கிளந்தான், திரெங்கானு, பகாங், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மொத்தம் 25, 438 பேர், 199 நிவாரண மையங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர் என்று நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி வரையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக நட்மா குறிப்பிட்டள்ளது.
கிளந்தான் மாநிலத்தை சேர்ந்தர்களே அதிக எண்ணிக்கையில் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். அந்த மாநிலத்தில் 4,288 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 6 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று அந்த அரசாங்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.
கிளந்தானில், குவா முசாங், ஜெலி, கோத்தா பாரு, குவால கெராய், தானா மேரா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நட்மா கூறுகிறது.
திரெங்கானுவில் பெசுட், டுங்ஙுன், ஹுலு திரங்கானு, மாராங் செத்தியு, ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளிலிருந்த 2,913 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 643 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








