பினாங்கு, நவ.28-
அரசாங்க மதிப்பீட்டுத் தேர்வுகளான யூபிஎஸ்ஆர் மற்றும் PT3 ஆகியவை அகற்றப்பட்டு இருப்பது, மலேசிய கல்வி முறையில் மிகப்பெரிய பாதிப்பையும், பின்னடைவையும் ஏற்படுத்தலாம் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விரு முக்கிய அரசாங்கத் தேர்வுகள் அகற்றப்பட்டதற்கு மாற்றாக, எந்தவொரு தேர்வு முறையும் அறிமுகப்படுத்தப்படாமலேயே பள்ளி அளவில் நடத்தப்படும் தேர்வு முறையை மட்டும் மேற்கோள்காட்டி, தேர்வுகள் நடத்தப்படுவது, மலேசிய கல்வி முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று தீபகற்ப மலாய் மாணவர் ஒருங்கிணைப்பு பேரவையின் பினாங்கு மாநில துணைத் தலைவர் முகமட் டேனியல் அலிமின் எச்சரித்துள்ளார்.
தொடக்கப்பள்ளிகளிலும், இடைநிலைப்பள்ளிகளிலும் கற்றல், கற்பித்தலை மதிப்பீடு செய்யக்கூடிய இரு முக்கிய தேர்வுகளை அகற்றும் கொள்கையை கொண்டு வந்தது மூலம் அதன் பாதிப்பு உடனடியாக தெரியாவிட்டாலும் நீண்ட கால அடிப்படையில் மாணவர்கள் கல்வி ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.
குறிப்பாக 3M என்று சொல்லக்கூடிய வாசிப்பு, எழுத்து மற்றும் கணக்கு ஆகியவற்றில் அடிப்படையை ஆளுமையை மாணவர்கள் இழக்க நேரிடும் என்பதுடன் அவர்களை கல்வி ரீதியாக ஊனப்படுத்தக்கூடிய அபாயமும் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பட்டாலும் அரசாங்க அளவில் நடத்தப்படக்கூடிய யூபிஎஸ்ஆர் மற்றும் PT3 தேர்வுகள், மாணவர்களின் கல்வி அடைவு நிலையை மதிப்பீடு செய்வதற்கு அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்ட பெரும் சவால்களுக்குரிய தேர்வுகளாகும்.
அந்த தேர்வுகளில் மாணவர்கள் சிறந்த அடைவு நிலையைப் பெற்றால், அவர்களின் அடுத்தக்கட்ட கல்வி அடைவு நிலை ,எவ்வாறு இருக்கும் என்று முன்கூட்டியே துல்லியமாக கணிக்கக்கூடிய தேர்வுகளாக அவை விளங்கின என்று டேனியல் அலிமின் குறிப்பிட்டார்.








