புத்ராஜெயா, பிப்ரவரி.27-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மீதான பங்குரிமை விவகாரம் தொடர்பாக சுமார் 70 பேர் இன்று புத்ராஜெயாவில் அந்த ஆணையத்தின் தலைமையகத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஏதுவாக, அஸாம் பாக்கி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இன்று காலை 10 மணியளவில் கருப்பு நிற உடை அணிந்து திரண்ட இந்தப் போராட்டத்தில், அரசியல்வாதிகள் மற்றும் 'ஜனநாயக முன்னேற்றத்திற்கான Teoh Beng Hock' அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்தில் இருக்கும் தொழிலதிபர் ஆல்பெர்ட் தே என்பவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
போலீசாரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.








