தாபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையமான ஆர்.சி.ஐ அறிக்கையின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில், அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் நிதியமைச்சகத்தின் முன்னாள் கருவூல தலைமைச் செயலாளர் ஆகிய இருவரையும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
60 வயதுகளில் உள்ள டத்தோஸ்ரீ மற்றும் டான் ஸ்ரீ பட்டம் பெற்ற இருவரும், ஆரஞ்சு நிற தடுப்புக்காவல் உடையுடன் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் புத்ராஜெயா நீதிமன்றத்திற்கு எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டனர்.
இருவரையும் விசாரணைக்கு ஏதுவாக ஒரு வார காலம் தடுப்புக்காவலில் வைக்க எஸ்.பி.ஆர்.எம்-க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கு முன்னர், இதே விசாரணை தொடர்பாக தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
தாபோங் ஹாஜி தொடர்பான ஆர்.சி.ஐ அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, எஸ்.பி.ஆர்.எம் இந்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னாள் தலைவர் முதல் கருவூலத்தின் உயர்மட்ட அதிகாரி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தாபோங் ஹாஜி விவகாரம் நாட்டின் அரசியலில் மீண்டும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.








