கோலாலம்பூர், டிச. 26-
கல்வத் குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு திரெங்கானு மாநிலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் 6 பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்படும் முறையை அம்மாநிலம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று கேட்டுக்கொண்டுள்ளது.
பொது மக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றமானது, குற்றம் இழைத்தவரை மேலும் அவமானப்பபடுத்துவதுடன், நாகரீக வாழ்வில் ஓர் அவமரியாதையான செயலாகவும் கருதப்படுகிறது என்று வழக்கறிஞர் மன்றத் தலைவர் முகமட் எஸ்ரி அப்துல் வஹாப் தெரிவித்தார்.
தண்டனை என்பது ஒருவர் புரிந்த குற்றத்திற்கு தண்டிக்கும் அதேவேளையில் அவர் குற்றத்தை உணர்ந்து, வருந்தி, மனம் திருந்திய மனிதான மீண்டும் சமுதாயத்தில் நடமாட அனுமதிப்பதே தவிர பொது மக்களின் முன்னிலையில் அவரின் தன்மானத்தை உரசிப்பார்த்து, வறுத்தெடுப்பது அல்ல என்பதை முகமட் எஸ்ரி விளக்கினார்.
திரெங்கானு மாநிலத்தில் ஷரியா சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு ஏற்ப கல்வத் குற்றவாளியான 42 வயது முகமட் எப்பெண்டி அவாங் என்ற நபருக்கு நாளை வெள்ளிக்கிழமை கோலத்திரெங்கானுவில் உள்ள அல் முக்தாபி பில்லா ஷா பள்ளிவாசலில் ஓர் இடத்தில் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஷரியா உயர் நீதிமன்ற நீதிபதி கமல்ருவாஸ்மி இஸ்மாயில் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தண்டனை முறை குறித்து கருத்துரைக்கையில் முகமட் எஸ்ரி மேற்கண்டவாறு கூறினார்.








