கிளானா ஜெயாவில் நடைபெற்று வரும், ஒளிக்காட்சி நிகழ்ச்சியினால் எழுந்துள்ள சர்ச்சையையடுத்து, அதன் அனுமதி நடைமுறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை தீர்க்க விரைவில் சிறப்பு கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் தனிப்பட்ட அமர்வில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் ஜஹ்ரி சாமிங்கோன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரமானது, பெட்டாலிங் ஜெயா நகர் மன்றக் கூட்டத்தில் முதலில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து தங்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை என்று மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
MBPJ ஆனது, வணிகர்களுக்கு ஆதரவான அமைப்பாக இருந்தாலும் கூட, பாதுகாப்பு அம்சங்களில் எந்த ஒரு சமரசமும் செய்யக் கூடாது என மன்ற உறுப்பினர் குஷாலினி மகேந்திரன் வலியுறுத்தியுடன், அனுமதி வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் பாதுகாப்பு குறித்து பெரும்பாலான மன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த ஒளிக்காட்சி நிகழ்ச்சியானது வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி வரையில், நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








