செபராங் ஜெயா, டிசம்பர்.11-
பினாங்கு, செபராங் ஜெயாவில் உள்ள தனது வீட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு தனது மனைவியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், அந்தக் கொலை குறித்து இன்று போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
மனைவியின் சடலத்தை கடந்த நான்கு நாட்களாக வீட்டில் வைத்திருந்த 28 வயதுடைய நபர், இன்று காலையில் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக வந்து சரண் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம், செபராங் ஜெயா, ஜாலான் தூனாவில் உள்ள அடுக்குமாடி வீடொன்றில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து அந்த வீட்டைச் சோதனைச் செய்த போலீசார், அறை ஒன்றில் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் 44 வயது மாது ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.
புலன் விசாரணைக்கு ஏதுவாக ஒரு வேலையற்ற நபரான அந்த ஆடவரைப் போலீசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.








