சுங்கை பட்டாணி, மார்ச்.08-
உரிமம் இல்லாத மெய்க்காப்பாளராகப் பணியாற்றி வந்த Mohd Faizal Sinorch என்பவர், காவற்படை அதிகாரி எனப் பொய்த் தோற்றமளித்து இரு பெண்களை ஏமாற்றியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, மோட்டார் சைக்கிளைப் பறித்தது ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, சுங்கை பட்டாணி நீதிமன்றம் அவருக்கு 8 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படிகளையும் விதித்துத் தீர்ப்பளித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் கெடா, பேரா மாநிலங்களில் இந்தத் துணிகரக் குற்றங்களைச் செய்துள்ளதாக அவர் மீது மூன்று வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதியப்பட்டு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.








