கோலாலம்பூர், நவம்பர்.04-
தைவான் நாட்டைச் சேர்ந்த பிரபலம் ஒருவர், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இறந்து கிடந்தது, ஒரு கொலையே என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
31 வயதுடைய ஒரு முன்னாள் தாதியரான அந்த நபர், ஹோட்டலில் இறந்து கிடந்தது, இதற்கு முன்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டது. ஆனால், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தற்போது வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஃபாடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.
தொழில்ரீதியான கலைஞரான அந்த தைவான் பிரஜை, படப்பிடிப்பிற்காக மலேசியா வந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோலாலம்பூரில் உள்ள Banyan Tree ஹோட்டலில் தங்கியிருந்த அந்த நபர், இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.








