தெமர்லோ, பிப்ரவரி.16-
கடந்த சனிக்கிழமை மதுபோதையில் வாகனம் ஓட்டி ஓர் இந்தியத் தம்பதியருக்கு மரணம் விளைவித்ததாக 28 வயது டுரியான் தோட்டக்காரர் ஒருவர் தெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
Shaun Lau Wee Hong என்ற அந்த டுரியான் தோட்டக்காரர், மாஜிஸ்திரேட் அனிஸ் அட்லினா அபு ஜோஹான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 12.55 மணியளவில், கோலாலம்பூர்-குவாந்தான் சாலையின் 134-வது கிலோமீட்டரில், மெந்தகாப், தாமான் துவாலாங் இண்டா அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த இளைஞர் ஓட்டி வந்த Porsche Cayenne சொகுசு கார் மோதியதில், Proton Preve ரக காரில் பயணம் செய்த 34 வயது ஷர்மிளா மற்றும் 35 வயதுடைய அவரது கணவர் ஆர். மதியழகன் உயிரிழந்தனர்.
கார் மோதப்பட்ட அடுத்த கணமே தீப்பற்றிக் கொண்டதால் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி தப்பிக்க முடியாமல் கணவனும் மனைவியும் கருகி மாண்டனர்.

1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டப்பட்ட அந்த நபர், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50,000 ஆயிரம் ரிங்கிட்டுக்குக் குறையாத அதே வேளை ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதமும் விதிக்கப்படலாம்.
எனினும் அந்த நபர் தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். இதனைத் தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் அந்த நபர் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.








