பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.27-
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுபாங் டெப்போவில் ஒருவரின் உயிரிழப்பிற்கு காரணமான இயந்திர மோதல் விபத்து தொடர்பாக, Rapid Rail Sdn Bhd நிறுவனத்திற்கு தரைப் போக்குவரத்து ஏஜென்சியான APAD ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2024 டிசம்பர் 12-ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் ராபிட் ரயில் நிறுவனத்தால் இயக்கப்பட்ட Shunting இயந்திரம், அதன் தயாரிப்பாளர் வழங்கிய பராமரிப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாததால் சரியாகச் செயல்படத் தவறியது.
இயந்திரத்தின் பிரேக் அமைப்பு செயலிழந்ததால், அது Speeder 3 என்ற மற்றொரு இயந்திரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ராபிட் ரயில் நிறுவன ஊழியர் ஒருவர் பலியானார். மேலும் மூவர் காயமடைந்தனர்.
தவிர 'Grinder', 'Speeder 3' மற்றும் 'Shunting' ஆகிய இயந்திரங்கள் பலத்த சேதமடைந்ததாக சுட்டிக் காட்டப்பட்டது. இந்த இழப்பின் மொத்த மதிப்பு 5 லட்சத்து 74 ஆயிரத்து 550 ரிங்கிட் என தெரிவிக்கப்பட்டது.
பொதுப் போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யத் தவறியதற்காகவும், பராமரிப்பு விதிமுறைகளை மீறியதற்காகவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அபாட் தெரிவித்துள்ளது.








