மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்-இன் புதிய தலைமை இயக்குநராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீர்திருத்தங்களை வலியுறுத்த இது சரியான தருணம் என பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் மலேசியர்களை வலியுறுத்தியுள்ளார்.
புதிய தலைமை ஆணையர் நியமிக்கப்பட்டதால், “புதிய எஸ்பிஆர்எம்” உருவாகிவிட்டது என்று கருத முடியாது என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், கடந்த காலங்களிலும் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டபோதிலும், பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்த போதிலும், பலமுறை நீதியும் பொறுப்பும் தாமதமாகி இறுதியில் மறுக்கப்பட்டதாகவும் நூல் இசா குறிப்பிட்டுள்ளார்.
அது போன்ற ஏமாற்றத்தை மீண்டும் மலேசியா அனுபவிக்க முடியாது என்றும், உண்மையான சீர்திருத்தம் வேண்டும் என்றால் எஸ்பிஆர்எம் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிறுவன பாதுகாப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், நாடாளுமன்றத்திற்கு அதிக பொறுப்புணர்வுடன் செயல்படும் கண்காணிப்பு முறைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் நூல் இசா தெரிவித்துள்ளார்.








