முன்னாள் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் காலஞ்சென்ற டத்தோ அந்தோனி கெவின் மொரைஸ் படுகொலையின் பின்னணியில் முன்னாள் உடற்கூறு மருத்துவ நிபுணர் Dr குணசேகரன் மூளையாக இருந்து செயல்படவில்லை என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இந்த படுகொலை தொடர்பில் தமது வாடிக்கையாளரிடமோ அல்லது வழக்கில் குற்றங்சாட்டப்பட்ட நபர்களுடனோ டாக்டர் குணசேகரன் எந்தவொரு சந்திப்போ அல்லது கொலையை திட்டமிடுவதற்கு வியூகம் வகுத்ததாகவே எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று டாக்டர் குணசேரன் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் டத்தோ என்.சிவநாதன் தெரிவித்தார்.
இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எஸ். ரவிச்சந்திரனுக்கும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமது கட்சிக்காரர் டாக்டர் குணசேகரனுக்கும் இடையிலான உறவு கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே முறிந்து விட்டது. நிலைமை இவ்வாறு இருக்க அவருடன் இணைந்து டாக்டர் குணசேகரன், துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அந்தோனி கெவின் மொரைஸ் ஸை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினார் என்று குற்றச்சாட்டப்படுவது ஏற்புடையதாக இல்லை என்று டத்தோ என்.சிவநாதன் தமது வாதத்தில் தெரிவித்தார்.
இக்கொலை வழக்கில் கோலாலம்பூர், வங்சா மாஜு இராணுவ மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் டாக்டர் குணசேகரன், எஸ். ரவிச்சந்திரன், ஆர். டினேஸ்வரன், ஏ.கே. தினேஷ்குமார், எம். விஸ்வநாதன் மற்றும் எஸ். நிமலன் ஆகிய அறுவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்ததை எதிர்த்து அவர்கள் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்களின் மேல்முறையீடு இன்று விசாரணைக்கு வந்தது.








