பொதுமக்களிடையே அச்சம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கருத்து வெளியிட்டதாக சமூக செயற்பாட்டாளர் ஆறுமுகம் துரைசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட அருண் துரைசாமி மீது ஜாவி நீதிபதி நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டது.
56 வயதான ஆறுமுகம் துரைசாமி, நீதிபதி நூருல் ஐனா அகமது முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக்கு கோரினார்.
கடந்த ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி, பிற்பகல் 3.45 மணியளவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கருத்து ஒன்றின் அடிப்படையில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்த கருத்து பொதுமக்களில் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், பொது ஒழுங்குக்கு எதிரான செயல்களை தூண்டியதாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிடுதல் தொடர்பான குற்றச்சாட்டாக குற்றவியல் சட்டம் பிரிவு 505(b) -இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








