கோலாலம்பூர், பிப்ரவரி.10-
சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸம்ரி வினோத் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் இருந்த போது, அவருக்கு மேசையில் உணவு பரிமாறப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் ஒரு நபருக்கு, காவல் நிலையத்தில் அரச மலேசிய போலீஸ் படை இத்தகைய சிறப்பு உபசரிப்பை வழங்கியது ஏன் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
தாம் பலமுறை அரசியல் போராட்டங்களுக்காகத் தடுப்புக் காவலில் இருந்த போது, தமக்கு ஒரு போதும் இத்தகைய வசதிகள் செய்து தரப்பட்டதில்லை என்று சுட்டிக் காட்டிய கணபதிராவ், ஸம்ரி வினோத்திற்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை என்று தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.
இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், அந்தப் புகைப்படத்தைப் பார்ப்பவர்களின் கோணத்தைப் பொறுத்தே அதன் அர்த்தம் அமையும் என்றும், இது குறித்த விவாதங்களுக்குள் தாம் நுழைய விரும்பவில்லை என்றும் கூறி விளக்கமளித்தார்.
இருப்பினும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் காவல்துறை மட்டத்தில் இத்தகைய சிறப்புச் சலுகைகளைப் பெறுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் சட்ட நடைமுறைகள் எவ்வித பாரபட்சமுமின்றி முறையாகப் பின்பற்றப்படுவதையும், ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் 'சிறப்பு கவனிப்பு' வழங்கப்படுவதைத் தவிர்க்கவும் உள்துறை அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீ. கணபதிராவ் வலியுறுத்தினார்.








