தாபோங் ஹாஜி யாத்ரீகர் வாரியம் தொடர்பான அரச ஆணைய விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாஸ் கட்சி மறுத்ததன் பின்னணியில், அம்னோவைப் புண்படுத்திவிடக் கூடாது என்ற அச்சம் உள்ளதா என பக்காத்தான் ஹராப்பான், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் அம்னோவுடன் ஒத்துழைக்கும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக பாஸ் இவ்வாறு நடந்து கொண்டதா என்றும் ராயர் கேள்வி எழுப்பினார்.
“இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களின் நலனை உண்மையாகப் பாதுகாக்கிறோம் என்றால், ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் பாஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஏன் வெளியேறினர்?” என ராயர் தனது முகநூல் பதிவில் கேள்வி எழுப்பினார்.
மேலும், தாபோங் ஹாஜி பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள் யார் என்பது தற்போது தெரிந்துவிட்ட நிலையில், பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை கோரி பாஸ் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துமா என்றும் ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.








