பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 27-
துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியை அமைச்சராக கொண்டுள்ள புறநகர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் MARA, சொந்தமாக தொடக்கப்பள்ளிகளை தொடங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் முன்மொழிந்துள்ள MARA தொடக்கப்பள்ளித் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
சொந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை கொண்டுள்ள MARA, சொந்தமாக தொடக்கப்பள்ளிகளை நிறுவும் திட்டத்தை அதன் அமைச்சர் ஜாஹிட் ஹமிடி கைவிட வேண்டும். அதற்கு பதிலாக நாட்டில் தற்போது உள்ள அரசாங்க தேசியப் பள்ளிகளின் கல்வி முறையை வளப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கல்வி அமைப்பின் தலைவர் நூர் அசிமா ரஹீம் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் உள்ள தேசியப்பள்ளிகள் எவ்வாறு பெற்றோர்களின் முதன்மை தேர்வுக்குரிய பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும், அவற்றின் கல்வித் தரம் எவ்வாறு உயர்த்தப்பட வேண்டும் முதலிய விஷயங்களில் துணைப்பிரதமர் கவனம் செலுத்த வேண்டுமே தவிர MARA-வின் தொடக்கப்பள்ளித் திட்டத்தில் அல்ல என்று நூர் அசிமா ரஹீம் வலியுறுத்தினார்.
மாராவின் தொடக்கப்பள்ளிகளை நிறுவும் திட்டத்தை மறந்துவிடும்படி புத்ராஜெயாவை அவர் கேட்டுக்கொண்டார்.








