உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கும் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு இறுதிக்குள் 400-க்கும் மேற்பட்ட குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவடையும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
மடானி அரசாங்கத்தின் நிலையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டிற்கு இணங்க, கடந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்ட இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து ங்கா கோர் மிங், மேலும் கூறுகையில், "இந்த முன்முயற்சிகள் நாட்டின் நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், ஊராட்சி மன்றங்களின் மின்சாரக் கட்டணச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க உதவும்," என்றார்.
கடந்த டிசம்பர் மாதம் வரை, 15.34 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 131 சூரிய ஒளி மின்விளக்கு திட்டங்களும், 22.39 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 136 எல்இடி மின்விளக்கு திட்டங்களும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையின் கீழ், எரிபொருள் திறன் மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் தமது அமைச்சு திடமாக இருப்பதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார்.









