கூலாய், மார்ச்.01-
ஜொகூர், செனாய் பகுதியில் உள்ள மருத்துவக் கருவி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில், முறையான ஆவணங்களின்றிப் பணியாற்றிய 117 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மியன்மார், வங்காளதேசம் நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். சட்டவிரோதமாகப் பணியாளர்களை அமர்த்தியதாக அந்தத் தொழிற்சாலையின் மனிதவள அதிகாரி ஒருவரும் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயகுநர் டத்தோ முஹமட் ருஸ்டி முஹமட் டாருஸ் தெரிவித்தார்.
அதிக ஊதியச் செலவைத் தவிர்க்கும் நோக்கில் இத்தகைய சட்டத்திற்குப் புறம்பானச் செயல்களில் ஈடுபடும் முதலாளிகளைக் கண்டறியப் பல வார காலக் கண்காணிப்பிற்குப் பிறகே இந்த ஓப்ஸ் மாஹிர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டத்தை மீறுபவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முஹமட் ருஸ்டி எச்சரித்துள்ளார்.








