கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-
சாலை வரியில்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட 53 ஆடம்பர வாகனங்களில் பிரபல வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 30 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ரோல்ஸ்-ரோய்ஸ் குல்லினன் ரகக் காரும் ஒன்றாகும் என்று சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் முகமட் கிஃப்லி மா ஹசான் தெரிவித்தார்.
சாலை வரியில்லாத வாகனங்களுக்கு எதிராக கடந்த மூன்று தினங்களாக கிள்ளான் பள்ளத்தாக்கில் ஜேபிஜே நடத்திய ஓப் லக்ஸரி எனும் மிகப் பெரிய சோதனை நடவடிக்கையில் மொத்தம் 53 ஆடம்பர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சாலை வரி எடுக்க மறந்து விட்டதாக ஆடம்பரக் கார்களின் உரிமையாளர்கள் சொன்ன பதிலை ஜேபிஜேவினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் விளக்கினார்.
கைப்பற்றப்பட்ட 53 ஆடம்பர வாகனங்களில் மூன்று அந்நிய நாட்டவர்கள் செலுத்தியதாகும். தங்கள் முதலாளிமார்களால் அந்தக் கார்கள் ஒப்படைக்கப்பட்டதாக அவர்கள் காரணம் கூறியுள்ளனர் என்று முகமட் கிஃப்லி குறிப்பிட்டார்.








