கோலாலம்பூரிலிருந்து சுரபாயா அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தடைந்த 22 வயது மலேசிய ஆடவர் ஒருவர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த மலேசியர், தனது உடலில் அணிந்திருந்த 'கார்செட்' (Corset) எனும் உடற்பயிற்சி பட்டையின் கீழ் மறைத்து வைத்திருந்த சுமார் 1 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்ஸ்டசி மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடன்பிரச்சினை காரணமாகவே அனைத்துலக போதைப்பொருள் கும்பலுக்கு உடந்தையாக தூதராகச் செயல்பட்டதாக அந்த மலேசியர் ஒப்புக் கொண்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க இந்தோனேசிய சட்டம் வகை செய்கிறது. அண்மையில் மலேசிய விமானி ஒருவர் போதைப்பொருளுடன் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு மலேசியர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








