பெட்டாலிங் ஜெயா, மார்ச்.22-
உலகளாவிய எண்ணெய் விலை திடீர் உயர்வால், மலேசியாவில் ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் மானியச் செலவு மிகக் குறுகிய காலத்தில் பெரிதும் அதிகரித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் காரணமாக, Hormuz நீரிணையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்று அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 விழுக்காடு Hormuz வழியாகவே செல்கிறது.
இத்தடையால் உலகளாவிய விநியோகம் குறைந்து, எண்ணெய் விலையானது கடந்த ஒரு வாரத்திற்குள், ஒரு Barrel-ஆனது தலா 70 அமெரிக்க டாலரில் இருந்து சுமார் 120 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, ரோன்95 மற்றும் டீசல் மானியச் செலவு 700 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 3.2 பில்லியன் ரிங்கிட் வரை உயர்ந்துள்ளது.
மலேசியா எண்ணெய் உற்பத்தி நாடாக இருந்தாலும், அதன் தேவையின் பெரும்பகுதி இறக்குமதியிலேயே சார்ந்துள்ளது.
குறிப்பாக, சுமார் பாதி எண்ணெய் விநியோகமானது பாதிக்கப்பட்ட Hormuz நீரிணை வழியாகவே வருகின்றது.
கடந்த ஆண்டில் மலேசியா சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ள நிலையில், 12.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இறக்குமதியும் செய்துள்ளது.
இதனால் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை மீறும் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மலேசியா எண்ணெய் உற்பத்தி செய்தாலும் கூட, ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்வதாக அன்வார் விளக்கமளித்துள்ளார்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யானது, சுத்திகரிப்பு, போக்குவரத்து மற்றும் காப்பீடு செலவுகளை கடந்த பின்னரே நுகர்வோரிடம் சேரும் என்பதால், மோதல் காலங்களில் இந்த அனைத்து செலவுகளும் அதிகரிப்பதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு எரிபொருளை மட்டுமல்லாமல், போக்குவரத்துச் செலவுகள், உணவுப் பொருட்களின் விலை மற்றும் குடும்பச் செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதனால், பொதுமக்கள் மீது முழு சுமையும் விழாமல் இருக்க, அரசு மானியங்களை அதிகரித்து வருகிறது.
இந்த சவாலான காலத்தில், உலகளாவிய செலவு அழுத்தத்தின் ஒரு பகுதியை அரசு ஏற்றுக் கொண்டு மக்களைத் தொடர்ந்து பாதுகாக்க முடிவு செய்துள்ளதாகவும் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.








