புத்ராஜெயா, மார்ச்.06-
ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணை ( Hormuz) மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியிலும், மலேசியாவில் பெட்ரோல் ரோன்95 விலையை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் என்ற அளவில் இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தக்க வைக்க முடியும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள சூராவிற்குச் சென்று தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த இக்கட்டான சூழல் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
தற்போதைய ஈரான் மோதலின் விளைவுகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கும். பெட்றோல் ரோன்95 விலையை இப்போதைக்கு மாற்றாமல் ஒரு சில மாதங்களுக்குத் தக்க வைக்க முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணை நீண்ட காலத்திற்கு மூடப்பட்டால், அது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும். இது குறித்து பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் நினைவுறுத்தினார்.
தற்போது 200-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ளன. இதனால் கப்பல்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும். இந்தச் சூழலால் இறக்குமதி செலவுகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செலவுகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.








