ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.05-
பினாங்கு, சுங்கை டூவா பகுதியில் உள்ள ஶ்ரீ மூர்னி அடுக்குமாடி வீட்டுப் பகுதியில் 41 வயது மதிக்கத்தக்க தனித்து வாழும் தாயார் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மதியம் 1.40 மணியளவில், கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் அந்த மாது தனது வீட்டின் படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே 40 மற்றும் 45 வயதுடைய இரு சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் Ketamine போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் தற்போது 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இப்பெண், தனது 15 வயது மகனுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது இந்தப் படுகொலை குறித்து பினாங்கு மாநிலக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








