கோலாலம்பூர், நவ.7-
மொத்தம் 421 பில்லியன் ரிங்கிட்டை உள்ளடக்கிய 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 130 மில்லியன் வெள்ளி போதுமானதாக இல்லை என்று டைனமின் சினார் காசே மலேசியா சமூக நல அமைப்பின் காப்பாளரும், தலைவருமான டத்தோ என். சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இந்திய சமுதாயத்திற்கான இந்த 130 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் 100 மில்லியன் ரிங்கிட், மித்ராவுக்கும், எஞ்சிய 30 மில்லியன் ரிங்கிட் கடன் வடிவில் தெக்குனிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய சமுதாயத்தை பலப்படுத்துவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு உண்மையிலேயே போதுமானதாக இல்லை என்று டத்தோ சிவகுமார் சுட்டிக்காட்டினார்.
இந்திய சமுதாயத்தில் பெருவாரியான மக்கள் இன்னமும் வறிய நிலையிலேயே உள்ளனர். அவர்களின் ஒட்டுமொத்த தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால் இந்த 130 மில்லியன் ரிங்கிட் எந்த அளவிற்கு போதுமானதாக இருக்க முடியும் என்று மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமாவின் தலைவருமான டத்தோ சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
எனவே இந்தியர்களின் சமூகவியல், கல்வி, வழிபாட்டுத்தலங்கள், சமூக மேம்பாடுகள், தொழில்முனைவோர் மற்றும் இந்து மக்களின் மேன்மைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு டத்தோ சிவகுமார் அறைகூவல் விடுத்தார்.








