குவாந்தான், பிப்ரவரி.25-
பல்லின மக்கள் வாழும் சமூகத்தில், நல்லிணக்கத்தைப் பாதுகாக்க, மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்களானது, நிறுவப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க கட்டப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா அஹ்மாட் ஷா வலியுறுத்தியுள்ளார்.
முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல், வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவது, விதிமுறைகளை மீறுவது மட்டுமல்லாமல், வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களிடையே தவறான புரிதல்களையும் பதட்டத்தையும் தூண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இச்சட்டங்களானது பொதுமக்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஒடுக்கவோ அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஒருங்கிணைத்து அதனை உறுதிச் செய்வதற்கே அவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எந்தவொரு தரப்பினரும் சட்டத்தை மதிக்காமல், தங்கள் சொந்த விருப்பப்படி செயல்படுவது சமூகத்திற்குள் குழப்பத்தையும் சச்சரவுகளையும் மட்டுமே உருவாக்கும் என்றும் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிடாமல் வீடு கட்டினால் எப்படி தரையில் இடிந்து விழுமோ? அது போல், முறையான அனுமதியின்றி கட்டப்படும் வழிப்பாட்டுத்தலங்களும் நிலைத்து நிற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பகாங் அரசாங்கம் ஒழுங்கு முறையில் செயல்பட வேண்டும் என்றும், மோதலைத் தூண்டும் அவசர நடவடிக்கைகளை நாடக்கூடாது என்றும் சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிர்வாக குழுவினர் மற்றும் இஸ்லாமிய சமயத்துறை அதிகாரிகள், உள்ளூர் மன்றங்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, நடைமுறைச் சட்டங்களுக்கு ஏற்ப பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், பகாங் மாநிலத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க மக்கள் முதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.








