கோலாலம்பூர், ஜனவரி.02-
கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாட்டு முனையத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய ஒருங்கிணைந்த சோதனை முறையினால், பயணிகளின் காத்திருப்பு நேரம் 8 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இனி சுங்கத்துறை, விமான நிலையப் பாதுகாப்புப் படை எனத் தனித்தனியாகச் சோதனை செய்யத் தேவையில்லை. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 60 புதிய ஸ்கேனர் கருவிகள் மூலம் ஒரே கட்டமாகப் பரிசோதனைகள் மின்னல் வேகத்தில் முடிக்கப்படுகின்றதாக அரச மலேசிய சுங்கத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அனிஸ் ரிஸானா முஹமட் ஸைனுடின் தெரிவித்தார்.
இந்த அதிரடி மாற்றத்தால் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளதோடு, மலேசியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பாராட்டி தென் கொரியச் சுங்கத்துறை உயரிய விருது வழங்கிக் கௌரவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 'மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டு 2026' திட்டத்தை முன்னிட்டு, நாளொன்றுக்கு 90, ஆயிரம் பயணிகளைக் கையாளும் இந்த விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் சீர்திருத்தம், உலகத் தரத்திலான பயண அனுபவத்தை உறுதிச் செய்துள்ளதாக டத்தோ அனிஸ் ரிஸானா மேலும் கூறினார்.








