ஜொகூர் பாரு, ஜூன் 22-
ஜோகூர், பத்து பஹாட், தஞ்சோங் செஜென்டிங், தென் மேற்காக 6.8 கடல் மைல் தொலைவில் படகு ஒன்று கவிழ்ந்ததில் உள்ளூரைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அவர்களுடன் பயணித்தாக நம்பப்படும் மீனவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பேரலை காரணமாக அந்த மீனவப்படகு கவிழ்ந்தது. 43 க்கும் 63 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு மீனவர்கள் காணாமல் போனதாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் இயக்குநர் முகமட் ஹனிஸ் முகமட் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
அந்த மீனவர்களை தேடும் பணி, ஜோகூர் பாருவை தளமாக கொண்டுள்ள மரிடிம் மீட்பு துணை மையம் மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








