கோவிலுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படவிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான மற்றும் தூண்டுதல் தன்மை கொண்ட தகவல்கள் தொடர்பாக, புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் சீ கியோங்-இன் சிறப்பு அதிகாரி லிம் செங் ஹான் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி “ஹம்லி ஹாமிடி” என்ற முகநூல் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவுடன் தொடர்புடையதாகும்.
அப்பதிவில், கடந்த 2025-ஆம் ஆண்டு, செப்டம்பர் 15-ஆம் தேதி, புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையை, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சருமான ஸ்டீவன் சிம் பார்வையிட்ட போது, பதிவுசெய்யப்பட்ட காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக லிம் செங் ஹான் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, மேம்பாட்டு தேவைகளை மதிப்பிடுவதற்காக ஸ்டீவன் சிம் அங்கு வருகை புரிந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆனால், அந்த முகநூல் பதிவில் “கோவிலுக்கு இடையூறு ஏற்படாத வகையில் புகிட் மெர்தாஜாம் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படும்” என ஸ்டீவன் சிம் கூறியதாக தவறான மற்றும் ஆதாரமற்ற குறிப்பு இணைக்கப்பட்டுள்ளதை லிம் செங் ஹான் சுட்டிக் காட்டியுள்ளார்.
இது குறித்து லிம் செங் ஹான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பதிவானது முற்றிலும் பொய்யானது என்றும், மக்களைத் தவறாக வழிநடத்துவதாக தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பரப்பப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையில், மருத்துவமனையை இடமாற்றம் செய்யும் எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும், மாறாக அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க தற்போதைய இடத்திலேயே கூடுதல் கட்டிட வசதிகளை அமைக்கும் திட்டம் ஆய்வில் உள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், இத்தகைய பொய்யான தகவல்கள்,ஸ்டீவன் சிமின் கண்ணியத்தை களங்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இன மற்றும் மத ஒற்றுமையையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக லிம் செங் ஹான் எச்சரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கு உரிமையாளரை உடனடி விசாரணை நடத்துமாறும், சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் போலீசாரிடம் லிம் செங் ஹான் கோரிக்கை விடுத்துள்ளார்.








