மலேசிய சிவனடியார் திருச்சபை, மலேசிய நால்வர் மன்றம் மற்றும் சிரம்பான் ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகம் இணைந்து நடத்திய 'திருவாசகம் முற்றோதல்' ஞான வேள்வி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாணிக்கவாசகர் பாட, இறைவனே கைப்பட எழுதிய 658 பாடல்களைக் கொண்ட திருவாசகப் பனுவலை, சுமார் 350-க்கும் மேற்பட்ட அடியார்கள் ஒன்றுகூடி முழுமையாக ஓதி வழிபட்டனர். நெகிரி செம்பிலான் மாநில அளவில் இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த ஆன்மீக நிகழ்வில், ஓதுவார்கள் மற்றும் இசைக்கலைஞர்களுடன் திரளான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.
இனிவரும் காலங்களில் இத்தகைய முற்றோதல் நிகழ்வுகள் மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். நிகழ்வின் நிறைவாக, பெரும் ஒத்துழைப்பு நல்கிய கோயில் நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, ஆலயத் தலைவர் கேப்டன் பரமேஸ்வரன் அவர்களுக்குச் சிறப்புச் செய்யப்பட்டது.














