பேங்காக், மார்ச்.15-
மலேசியாவில் தேடப்பட்டு வரும் மதப் போதகர் ஸம்ரி வினோத்தும் தமிம் டாஹ்ரியும் கடந்த வியாழக்கிழமை தரைவழியாகத் தெற்கு தாய்லாந்திற்குள் நுழைந்திருப்பதை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாக பெர்த்தா ஹரியான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இனங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கியது, இந்துக்களின் புனிதச் சின்னமான 'சூலத்தை' சேதப்படுத்தியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குத் தொடர சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் முறையான பயண ஆவணங்களைப் பயன்படுத்தி சுங்கை கோலோக் எல்லை வழியாகத் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ளதை மலேசியப் காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயிலும் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் அவர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இன்னும் தாய்லாந்தின் தெற்குப் பகுதியிலேயே இருப்பதாகக் கருதப்படுகிறது.








