Aug 15, 2026
Thisaigal NewsYouTube
தாபோங் ஹாஜி வாரியத்தில் பணமோடியும், முறைகேடும் நடந்தது முற்றிலும் உண்மை: பிகேஆர் தேசிய மாநாட்டில் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

தாபோங் ஹாஜி வாரியத்தில் பணமோடியும், முறைகேடும் நடந்தது முற்றிலும் உண்மை: பிகேஆர் தேசிய மாநாட்டில் அன்வார் உறுதி

Share:

தாபோங் ஹாஜி யாத்ரீகர் வாரியம் தொடர்பான மேற்கொள்ளப்பட்ட அரச விசாரணை ஆணைய அறிக்கையில், அந்த நிறுவனத்தில் பணமோசடியும், முறைகேடான பணப்பறிப்பு இடம்பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேட்டினால் தாபோங் ஹாஜி வாரியம் சுமார் 12 பில்லியன் ரிங்கிட் இழப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலாக்காவில் நடைபெற்று வரும் பிகேஆர் தேசிய மாநாட்டில் இன்று பங்கேற்று உரையாற்றிய அன்வார், ‘பண மோசடி’ என்ற வார்த்தையை மக்கள் விரும்புவதில்லை என்றாலும், மலாக்காவில் மீண்டும் இதனைக் கூற விரும்புகிறேன். தாபோங் ஹாஜியில் உண்மையிலேயே முறைகேடு நடந்துள்ளது என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

தாபோங் ஹாஜி தொடர்பான ஆர்சிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே தாம் இந்தக் கருத்தை தெரிவிப்பதாகவும் அன்வார் விவரித்துள்ளார்.

அதேவேளையில் ஆர்சிஐ அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிடும் முடிவுக்கு அமைச்சரவையில் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.

அமைச்சர்கள் அனைவரும் ஆர்சிஐ அறிக்கையில் கண்டறியப்பட்டவைகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்ததாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், நிதி முறைகேடுகளுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அன்வார், சம்பந்தப்பட்ட விவகாரங்களில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என அமைச்சரவை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முறைகேடு செய்யப்பட்ட நிதிக்கு பொறுப்பானவர்கள் என கண்டறியப்படும் நபர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக போலீஸ் உள்ளிட்ட அமலாக்க அமைப்புகள் முறையான விசாரணைகளைத் தொடங்கும் என்றும் அன்வார் உறுதியளித்துள்ளார்.

அதேவேளையில், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் அவர்களும், முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 12 பில்லியன் ரிங்கிட் நிதி விவகாரம் முழுமையாக வெளிக்கொணரப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News