ஜோகூர் பாரு, செப்டம்பர்.04-
ஜோகூரில் மீண்டும் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. பத்து பஹாட்டில் ஶ்ரீ மேடான், பாரிட் சுலோங் முதலிய பகுதிகளில் நேற்று மாலையில் நில நடுக்கத்திற்கான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
யொங் பெங்கிலிருந்து தென் மேற்காக 10 கிலோமீட்டர் தூரத்தில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 2.9 ஆகப் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா தனது அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
வடக்கில் 1.95 பாகையிலும், கிழக்கில் 102.9 பாகையிலும் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் நிலைக் கொண்டிருந்ததாக அது தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஜோகூரில் முதல் முறையாக சிகாமட்டில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது முதல் ஜோகூர் மாநிலத்தின் நில அதிர்வுகளைத் தாங்கள் தற்போது அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.








