ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.27-
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், Pantai Jerejak சட்டமன்ற உறுப்பினருமான ஃபாமி ஸைனோல், தனது மனைவிக்கு காயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அவரை அடித்து குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவரான ஃபாமி ஸைனோல், மாஜிஸ்திரேட் Chia Huey Ting முன்னிலையில் நிறுத்தப்பட்டு,அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
35 வயதான Fahmi Zainol, கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி இரவு 10 மணியளவில், பினாங்கு பாயான் லெப்பாஸ், Persiaran Pantai Jerejak 11, இல் உள்ள தனது இல்லத்தில் 35 வயதுடைய தனது மனைவி Nur Hidayah Abd Jabar என்பவரைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் 2 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் Fahmi Zainol- லை விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.








