சிரம்பான், டிசம்பர்.11-
நேற்று காலையில் சிரம்பான், ஜாலான் ராசா – மம்பாவ் செல்லும் சாலையில் போர்ட்டிக்சன் டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் போலீசார் மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இத்துடன் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவரும் முறையே நீலாய், சிரம்பான் மற்றும் போர்ட்டிக்சன் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரிடமிருந்து கைப்துப்பாக்கியைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு, சந்தேகப் பேர்வழி இந்தக் கைதுப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மூவரும் கொலை குற்றச்சாட்டு மற்றும் சுடும் ஆயுதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் காருக்குள் சூடுபட்டுக் கிடந்த இருவரில் ஒருவர் உயிரிழந்ததாக அல்ஸாஃப்னி அஹ்மாட் மேலும் கூறினார்.








