ஈப்போ, அக்டோபர்.06-
நகர்ப்புற புதுப்பித்தல் உத்தேச மசோதாவை வலுப்படுத்தும் நோக்கில், அண்மைய நகர்ப்புற புதுப்பித்தல் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறையான PLANMalaysia-விற்கு உத்தரவிட்டுள்ளார்.
அம்னோ முன்வைத்த திட்டங்கள் உட்பட பரிந்துரைகள் யாவும் சாத்தியமானவையா? மற்றும் பொது நலனுக்கு உகந்தவையா? என்பது குறித்து இதன் வாயிலாக பரிசீலிக்கப்படும். அவை நடைமுறைக்கு ஏற்றதாக இருக்குமானால், அவர்களின் பரிந்துரைகள் உத்தேசச் சட்ட மசோதாவில் எதிர்காலத் திருத்தங்களில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடும் என்று ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
கடந்த வாரம் சனிக்கிழமை ஈப்போ, புந்தோங், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புந்தோங், கெப்பாயாங் மற்றும் பெர்சாம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 625 இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு தலா 400 ரிங்கிட் நிதி உதவி என ஒன்றரை லட்சம் ரிங்கிட்டும், புந்தோங், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் மண்டபத்தை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கு ஒரு லட்சம் ரிங்கிட் மானியமும் வழங்கிய நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ங்கா கோர் மிங் இதனைத் தெரிவித்தார்.
மக்களின் அனைத்து ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ங்கா கோர் மிங், உத்தேச நகர்புற புதுப்பித்தல் சட்ட மசோதா மக்களுக்கு, குறிப்பாக பாழடைந்த மற்றும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டதாகும் என்று விளக்கினார்.








