ஷா ஆலாம், பிப்ரவரி.25-
சிறு வாகன விபத்தைத் தொடர்ந்து 70 வயது முதியவரைத் தாக்கிய வர்த்தகர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட அபாராத விதிப்பு தண்டனையை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று மாற்றியமைத்தது.
52 வயது சைஃபுல் அட்லி யுசோஃப் என்ற அந்த வர்த்தகருக்கு காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த 5,000 ரிங்கிட் அபராதத்தை ரத்து செய்த உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்லாம் ஸைனுடின், 4 மாத கால சிறைத் தண்டனையை விதித்து உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட வர்த்தகரால் சாலை நடுவே காருக்குள் பலவந்தமாகத் தாக்கப்பட்ட 70 வயது லியூ கூன் ஃபூ என்ற முதியவர், இந்த சம்பவத்தினால் உடல் ரீதியாக தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மாண்டரின் மொழியில் நீதிமன்றத்தில் விவரித்தார். "இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தாம் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், வீட்டை விட்டு வெளியேறவும், கார் ஓட்டவும் அச்சமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் தனது நாக்கில் ஆறு தையல்கள் போடப்பட்டதால் உணவு உண்பது சிரமமாக உள்ளது. விபத்து தற்செயலாக நடந்தது, ஆனால் தம்மைத் தாக்கிய நபர் தம்மைத் தேடி வந்து பழி வாங்குவாரோ என்று அச்சம் மேலோங்கியிருப்பதாக அந்த முதியவர் நீதிமன்றத்தில் மிக உருக்கமாக விரித்தார்.








