செந்தூல், ஸ்ரீ நாகம்மன் ஆலயம் உடைப்பட்ட விவகாரத்தில் மஇகாவை சேர்ந்தவர்கள் 12 லட்சம் வெள்ளி கேட்டு அடம்பிடித்த காரணத்தினாலேயே பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய அந்த ஆலயப்பிரச்னை, நீதிமன்றம் வரை சென்று, கடைசியில் உடைக்கப்பட வேண்டிய நிலைக்கு இலக்கானதாக ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
அதேவேளையில் கோயில் விவகாரத்தில், தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்தி பேசுவதை மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சரஸ்வதி கந்தசாமி கேட்டுக்கொண்டார்.
பிகேஆர் கட்சியை சேர்ந்தவர்கள், சரவணனைப் போல் தரம் தாழ்த்தி பேச முடியாது என்றாலும் வரும் ஜனவரி மாதம் முதல் பத்திரிகை வாயிலாக தாம் கேட்கின்ற ஒவ்வொரு கேள்விக்கு பதில் சொல்வதற்கு மஇகாவினருக்கு திராணி உண்டா ? என்று, இன்று தனது சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சரஸ்வதி கந்தசாமி சவால் விடுத்தார்.
செந்தூல் நாகம்மன் கோயில் விவகாரம் தொடர்பில் நடைபெற்ற இந்த செய்தியாளர் கூட்டத்தில் பத்து எம்.பி. பி. பிரபாகரன் மற்றும் மலேசிய இந்து சங்கப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.








