கோலாலம்பூர், பிப்ரவரி.28-
அரசாங்கத்தைக் கவிழ்க்கவும், நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்கவும் நடப்பதாகக் கூறப்படும் சதித் திட்டங்கள் குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று கருத்து தெரிவித்த ஐஜிபி, இந்த விசாரணை மிகவும் விரிவானது என்பதால், இதற்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார். "இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது. எனவே, அனைத்து தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும். ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் தொழில்முறை ரீதியாக விசாரணை முன்னெடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை இது தொடர்பாகக் போலீஸ் புகார் பெறப்பட்டது. இதில் செல்வாக்குமிக்க ஓர் உள்ளூர் நபர் மற்றும் ஒரு சர்வதேச ஊடக நிறுவனத்திற்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கையாளும் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதனிடைய சட்டத்துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி "இந்தச் சதியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பின்னணி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.








